Donnerstag, 11. September 2025

சமூகப் பிரஞ்ஞையுடன் வாழ்ந்த அஜீவனுக்கு அஞ்சலி

சமூகப் பிரஞ்ஞை கொண்ட ஓர் படைப்பாளி தனது செயற்பாடுகளை நிறுத்தி நம்மை விட்டு மறைந்துள்ளார்.

அஜீவனுடன் எனது தொடர்புகள் மிகக் குறைவாக இருந்தாலும், பல அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயலாற்ற வாய்ப்பு கிடைத்தது. அரசியல் நோக்குகளில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழத்தமிழர் நலனில் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சித்தோம்.

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் ஆயுதங்கள் மௌனமான பிறகு, விடுதலைப் புலிகளின் அரசியல் தொடர்பான முரண்பாடுகள் ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் பல மையங்கள் மற்றும் தனிநபர்களிடம் தோன்றின. அதே நேரத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டங்களை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்தில் பொதுவான அமைப்பொன்றை உருவாக்கும் பணியில் அஜீவனும் என்னுடன் இணைந்து செயல்பட்ட நினைவுகள் இன்று மனதில் மீண்டும் உயிர்த்தெழுகின்றன.

அஜீவன் பலருடன் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், ஈழ மக்களின் அரசியல் மற்றும் நலன்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டவராகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். மேலும், அவர் ஒரு படைப்பாளியும் கலைஞரும் என்பதால் பல இலக்கிய நண்பர்களையும் கலைஞர்களையும் சுற்றியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது முகநூலில் அஜீவன், தன் வாழ்வின் இறுதியைப் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தினார்:

“என்னை பராமரிக்கும் ஒரு சுவிஸ் நண்பர், ‘உனக்கு ஏதாவது நடந்தால் என்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை’ என்றார்.
நான் சொன்னேன்: ‘இறந்த பிறகு என்ன செய்வார்கள் என நான் கவலைப்படவில்லை. அதேபோல் யார் வந்து என்னை பார்க்கிறார்கள் என்பதையும் நான் உணரப்போவதில்லை. ஒவ்வொரு ஜீவனும் எப்படியோ அழியத்தான் போகிறது. அதை தடுக்க யாராலும் முடியாது. அதற்காக யோசிக்க வேண்டிய அவசியமுமில்லை, வருந்த வேண்டிய அவசியமுமில்லை. நாம் எதையும் கொண்டு போகப் போவதில்லை. நடப்பது நடக்கும், அவ்வளவுதான்’ எனச் சொல்லிவிட்டு சிரித்தேன்.”

அஜீவன், புகழ்பெற்ற பகுத்தறிவாளர் ஆபிரகாம் தோமஸ் கோவூர் (Abraham Thomas Kovoor) குடும்பத்தின் வாரிசாவார். இன்று பலருக்கு டாக்டர் கோவூர் பற்றிய அறிவு குறைவாக இருக்கலாம். அவர் தமிழ் சமூகத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்தி, பல புத்தகங்களை எழுதி மக்களை விழிப்புணர்வுடன் ஆக்கியவர்.

கோவூரின் சிந்தனைகள்:

  • “மனித குலத்திற்கான மிகப்பெரிய பகைவர் – மூடநம்பிக்கை.”

  • “அறிவியலால் சோதிக்க முடியாத எந்தக் கூற்றையும் நான் ஏற்க மாட்டேன்.”

  • “சாமியார்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்; உண்மையான அதிசயம் – மனிதனின் அறிவுத்திறன்.”

  • “கடவுள் இல்லை; மனிதன் தான் தனது விதியை உருவாக்குவான்.”

இந்த சிந்தனைகள் அஜீவனின் வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தியதால், அவர் சமூக அக்கறையுடன் செயல்பட்டார்.

இப்போது புலம்பெயர் நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்கு உழைத்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் படிப்படியாக உலகைவிட்டு விலகிக்கொண்டு இருப்பதைக் காட்டும் இன்னொரு நிகழ்வாக அஜீவனின் மறைவு அமைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சமூகப் பற்றுள்ள பல நபர்கள் தமது உடல் நலனை புறக்கணித்து மிக விரைவாக வாழ்க்கையை முடித்து விடுகின்றனர். அஜீவனின் இழப்பு அதற்கான இன்னொரு உதாரணமாகும்.

அவரது படைப்பாற்றலுக்கும் சமூகத்திற்கான காதலுக்கும் தலைவணங்கி நாங்கள் விடைபெறுகிறோம்.

அஜீவனை இழந்து தவிக்கும் அவரது குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 - கணபதிப்பிள்ளை சுதாகரன், Switzerland 11.09.2025